பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த காவலர்களின் பிள்ளைகளுக்கு  புதுக்கோட்டையை எஸ்பி பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10.05.24-ம் தேதியன்று 10-ம் வகுப்பு பொது தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குழந்தைகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். இதில் திருமயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியபாபாவின் மகள் ஆ. ஜனனிஸ்ரீ 500க்கு 497 மதிப்பெண்களும், அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமை காவலர் சுந்தராம்பாளின் மகள் ஊ. அகல்யாவும் 497 மதிப்பெண்களும், பெற்று மாநிலஅளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்றனர். மேலும் ஆயுதப்படையில் தலைமை காவலர் சிவபாலனின் மகள் சுவேதா 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்றார். மேற்கண்டமாணவிகளை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.