நான் தாய்லாந்து போனது அமித் ஷாவுக்கு எப்படித் தெரியும் : பிரியங்கா காந்தி கேள்வி

எனது தாய்லாந்து சுற்றுப் பயணங்கள் குறித்து அமித் ஷாவுக்கு எப்படித் தெரியும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களான கிஷோரி லால் சர்மா, ராகுல் காந்தி ஆகியோருக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. இந்நிலையில் காங்கிரஸ் குடும்பம் அமேதி, ரேபரேலிக்கு தேர்தல் நேரத்தில் மட்டுமே வருகிறது என பாஜக விமர்சனம் செய்தது.

இது தொடர்பாக பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இதில் சிறிதும் உண்மையில்லை. யார், எப்போது, எங்கே, குறிப்பாக பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதில் அமித் ஷா பெயர் பெற்றவர். சில நாட்களுக்கு முன்பு நான் தாய்லாந்தில் என் மகளைப் பார்க்கச் சென்றேன்.

அவர் (அமித் ஷா) ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டார். ஆமாம், நான் தாய்லாந்துக்குச் சென்றேன். ஆனால், இதை அமித் ஷா எப்படி அறிந்து கொண்டார் என்பதைச் சொல்வாரா… அவர் அனைத்து தகவல்களையும் வைத்திருக்கும் போது, அவர் ஏன் பொய் சொல்ல வேண்டும்?” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரியங்கா, “அமேதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி இரானி மக்களிடம் நெருக்கமான பிணைப்பை உருவாக்க 40 ஆண்டுகள் ஆகும். எனது குடும்பம் அமேதி மக்களுக்கு சேவைசெய்ய வந்திருக்கிறோம். ஆனால், ஸ்மிருதி இரானி அமேதி மக்களுக்கு சேவை செய்ய இங்கு வரவில்லை” என்றார்.