கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கு மே 28-க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரண வழக்குத் தொடர்பான மறு விசாரணை மே 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மாணவி தரப்பில் ஆஜராகி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் செல்போன் உரையாடல், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட விபரங்கள் கோரினர்.

மேலும், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் வழக்கில் சேர்க்க வலியுறுத்தி மாணவி தரப்பில் வக்காலத்து தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கை மே-14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, பள்ளித் தரப்பிலிருந்து தாளாளர், பள்ளி செயலாளர், பள்ளி முதல்வர் ஆஜராகினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த மாணவியின் தாய் செல்வி, பள்ளித் தரப்பினரைக் கண்டதும் கூச்சலிட்டவாறு அழுது புலம்பினர்.

அப்போது அருகிலிருந்தவர்கள், அவரை அமைதிப்படுத்தினர். தொடர்ந்து மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாப்பா மோகன், கடந்த விசாரணையின்போது, கோரிய கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் செல்போன் உரையாடல், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட விபரங்கள் வழங்கப்பட வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் தேவசந்திரன், கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து வழக்கை மே. 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.