கவுகாத்தி ரயில் நிலையத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் 2 பேர் கைது

அல்கொய்தா பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய வங்கதேசத்தை சேர்ந்த சந்தேகத்துக்குரிய இரண்டு பயங்கரவாதிகள் கவுகாத்தி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலம், கவுகாத்தி ரயில் நிலையத்தில் வங்கதேச பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சந்தேகத்துக்குரிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

கவுகாத்தி இளைஞர்களை மூளை சலவை செய்து, பயங்கரவாதத்தில் ஈடுபடுத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரும், வங்கதேசத்தின் பிரமன்பரி மாவட்டத்தைச் சேர்ந்த பஹர் மியா (30), நெட்ரோகோனா மாவட்டத்தைச் சேர்ந்த ரசல் மியா (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் தடைசெய்யப்பட்ட இந்திய துணை கண்ட அல்கொய்தா பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய அன்சருல்லா பங்களா அணியை சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், வங்கதேசத்தை சேர்ந்த இவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததும், இந்தியாவில் தங்கியிருந்து அசாமில் பயங்கரவாத நெட்வொர்க்கை விரிவுபடுத்த, இந்திய ஆவணங்களைப் பெற்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அசாமில் கடந்த ஆண்டு அன்சருல்லா பங்களா அணியை சேர்ந்த குழுவினர் செயல்பாடுகள் கண்டறிந்து முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.