முஸ்லிம் பெண்களின் முகத்தை காட்ட சொல்லி சோதனை – ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மீது எப்ஐஆர் பதிவு

வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்த பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் மாதவி லதா. இவர், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை எதிர்த்து போட்டியிடுவதால் ஸ்டார் வேட்பாளராக அறியப்படுகிறார். எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின்போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்குள்ளானார்.

இதற்கிடையே, இன்று நடைபெற்றுவரும் நான்காம்கட்டத் தேர்தலின்போது வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பர்தா அணிந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம், அவர்களின் அடையாள அட்டையை காண்பிக்கச் சொன்னதுடன், பர்தாவை நீக்கி முகங்களை காண்பிக்கச் சொல்லி சோதனை செய்துள்ளார் பாஜக வேட்பாளர் மாதவி லதா. இந்தச் செயல் சர்ச்சையான நிலையில், மாதவி லதா மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எக்ஸ் பக்கத்தில் வழக்குப் பதிவை உறுதிப்படுத்தியுள்ள ஹைதராபாத் ஆட்சியர் ரொனால்ட் ரோஸ், “வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்க்க அவர்களின் பர்தாவை நீக்க சொல்ல எந்த வேட்பாளரும் உரிமை இல்லை. வாக்காளர்கள் மீது சந்தேகம் இருந்தால் தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர் முறையிட்டு இருக்கலாம். மாதவி லதா மீது மலக்பேட் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆனால், ”வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்க்க ஒரு வேட்பாளருக்கு உரிமை உண்டு” என்று மாதவி லதா கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், “நான் ஒரு வேட்பாளர். சட்டத்தின்படி, அடையாள அட்டைகளை சரிபார்க்க வேட்பாளருக்கு உரிமை உண்டு. நான் ஒரு பெண். அடையாள அட்டையை பரிசோதிக்க மிகவும் பணிவுடன் அவர்களிடம் நடந்துகொண்டேன். யாராவது இதனை ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்க விரும்பினால், அவர்கள் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். வாக்குச்சாவடிகளில் காவல் துறையினர் மிகவும் மந்தமாக செயல்படுகின்றனர். அவர்கள் சுறுசுறுப்பாக இல்லை. அவர்கள் எதையும் சரிபார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.