”சிறை கண்காணிப்பாளர் தான் கையை உடைத்தார் : நான் சிறையில் கொல்லப்படுவேன்” கோஷம் எழுப்பிய சவுக்கு சங்கர்

கோவை மத்திய சிறையில் தான் கொல்லப்படலாம் என சவுக்கு சங்கர் மருத்துவமனை வாசலில் சத்தமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் கோவை சைபர் கிரைம் போலீஸார்,  கடந்த 4 ம் தேதி அதிகாலையில்  தேனியில் கைது செய்தனர்.

சவுக்கு சங்கரை அழைத்து வந்த போது, வாகனம் விபத்துக்கு உள்ளான நிலையில், மாற்று வாகனத்தில் அழைத்து சென்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின்னர் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து, சிகிச்சையில் சவுக்கு சங்கருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது.  அதையடுத்து அவருக்கு  கோவை அரசு மருத்துவமனையில் வலது கையில்  மாவுக்கட்டு போடப்பட்டது. ஒரு வாரம் ஆன நிலையில் அந்தக் கட்டை அகற்றிவிட்டு மீண்டும்  கட்டுப்போட இன்று மீண்டும்  கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

கட்டுப்போட்டுக் கொண்டு வெளியே வந்த சவுக்கு சங்கர், அங்கிருந்து செய்தியாளர்களை நோக்கி, கோவை சிறையில் தான் கொல்லப்படலாம் என்று சப்தமிட்டார்.  “கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் எனது கையை உடைத்தார்.  கோவை மத்திய சிறை தான் சவுக்கு சங்கருக்கு சமாதி என்று மிரட்டி வருகின்றனர்.  எனவே கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்” எனக்கூறி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அவர் முழக்கமிட்டார்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின் சிகிச்சை முடித்து சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.