“ஏழைகளின் குரலுக்கு செவி சாய்க்கும் அரசே நாட்டுக்குத் தேவை” – ராகுல் காந்தி

“ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கக் கூடிய, பலவீனமானவர்களுக்கு துணை நிற்கக் கூடிய, யாருக்கும் அஞ்சாத ஓர் அரசுதான் நாட்டுக்குத் தேவை” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “அரசியலில் பல்வேறு வகையான உறவுகள் உள்ளன. சில குடும்ப உறவுகளும் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர் ரெட்டி என் தந்தையின் சகோதரரைப் போன்றவர். இந்த உறவு பல ஆண்டுகள் பழமையானது. ராஜசேகர் ரெட்டி ஆந்திராவுக்கும், நாடு முழுவதற்கும் பாதையைக் காட்டியவர்.

ராஜசேகர் ரெட்டி மேற்கொண்ட பயணமே ‘பாரத் ஜோடோ யாத்ரா’வுக்கு உத்வேகம் அளித்தது. நீங்கள் நாடு முழுவதும் பாத யாத்திரை செல்ல வேண்டும் என்று ராஜசேகர் ரெட்டி என்னிடம் கூறியிருந்தார். நாம் பாத யாத்திரை செல்லும்போது தான் மக்களின் பிரச்சினைகள் மற்றும் பிறரின் வலிகள் புரியும் என்றும், நமது வலிகள் முடிவுக்கு வரும் என்றும் கூறியிருந்தார். என் தந்தை இல்லாத பிறகு அவர் என்னை வழிநடத்தினார்.

ராஜசேகர் ரெட்டியின் அரசியல் சமூக நீதிக்காகவும், பொதுநலத்துக்காகவும் இருந்தது. இன்று அது இல்லை. ஆந்திரப் பிரதேசத்தில் இன்று பழிவாங்கும் அரசியல் நடந்து வருகிறது. டெல்லியில் ஆந்திராவின் குரலாக இருந்தவர் ராஜசேகர் ரெட்டி. இன்று ஆந்திராவில் பாஜகவின் பி-டீம்தான் ஆட்சியில் இருக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமல்ல, சந்திரபாபு நாயுடுவும் மோடியின் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் பிரதமர் மோடியிடம் அமலாக்க்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை உள்ளது.

காங்கிரஸின் சித்தாந்தம் ஒருபோதும் பாஜகவுடன் ஒத்துப்போகாது. ஜெகன் மோகன் ரெட்டி மீது ஊழல் வழக்குகள் இருப்பதால் அவரால் பாஜகவுக்கு எதிராக எதுவும் சொல்ல முடியவில்லை. சந்திரபாபு நாயுடுவின் நிலையும் இதுதான்.

ஆந்திர மக்களுக்கு நரேந்திர மோடி அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திரப் பிரேதேசத்துக்கான சிறப்பு அந்தஸ்து, கோலவரம் திட்டம், கடப்பா எஃகு ஆலை என எதாவது கிடைத்ததா? பாஜக முன் ஆந்திரப் பிரதேச அரசு தலைகுனிந்த நிலையில் இருந்ததால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

2024-ல் எங்கள் அரசு வரும். அரசு வந்தவுடன் ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஆந்திராவுக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம். கோலவரம் திட்டம் மற்றும் கடப்பா எஃகு ஆலை ஆகியவற்றை நீங்கள் காணலாம். நாங்கள் 100% உத்தரவாதம் அளிக்கிறோம்.

நாம் அனைவரும் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம். அரசியல் சாசனத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே நாம் உரிமைகளைப் பெற்றுள்ளோம். நரேந்திர மோடி அரசியலமைப்பை ஒழிக்க விரும்புகிறார். ஆனால், உலகில் எந்த சக்தியாலும் அதை ஒழிக்க முடியாது. ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கக் கூடிய, பலவீனமானவர்களுக்கு துணை நிற்கக் கூடிய, யாருக்கும் அஞ்சாத ஓர் அரசுதான் நாட்டுக்குத் தேவை” என்று ராகுல் காந்தி பேசினார்.