திருச்சி சோமரசம்பேட்டை அருகே அருந்து விழுந்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண்கள் பலி

திருச்சியில் மழை காரணமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்த‌ நிலையில், தற்போது அக்னி நட்சத்திரமும் துவங்கி பகல் நேரங்களில் கடும் வெப்ப அலைகள் வீசுவதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருச்சி சுற்றுவட்ட பகுதிகளில்  கடந்த சில நாட்களாக 110 டிகிரிக்கும் மேல் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. முதலில் மிதமான மழையாக துவங்கி சற்று  கனமழையாக பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்ப அலைகளின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மக்களின் மகிழ்ச்சியை சோகமாக்கும் விதமாக திருச்சி சோமரசம்பேட்டை அருகே அருந்து விழுந்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சோமரசம்பேட்டை அருகே எட்டு மாந்திடல் கிராமத்தில் தங்களது வயலில் வாழைக்கு உரம் வைக்கும் பணியில் ராதிகா, செல்வி  ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வயலில் இருந்து 2 பெண்களும் நடந்து வயலை விட்டு வெளியேற சென்றனர். அப்பொழுது வயலில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாத அவர்கள்  மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி  தூக்கி எறியப்பட்டு  சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீஸார் அவர்களது உடல்களை கைப்பற்றி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.