உத்தரபிரதேசத்தில் லாரி மீது மோதி பற்றி எரிந்த கார் : மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்

உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதில், மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் அரிவார் (25) என்பவருக்கும் வாராணசி அருகே உள்ள பரதா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று, மணமகன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. மணமகன் அழைப்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஆகாஷ், அவரது சகோதரர் அஷிஷ், உறவினர்கள் மாயங்க், ரவி அஹிர்வார், ரமேஷ் ஆகிய 5 பேரும் கார் ஒன்றில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை ஓட்டுநர் ஜெய் கரண் என்பவர ஓட்டி வந்தார்.

இவர்கள் பயணித்த கார் சிஎன்ஜி எனப்படும், எரிவாயு மூலம் இயங்கும் கார் ஆகும். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பரிச்சா அனல் மின் நிலையம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக காரின் பின்புறம் மோதியது. இதில் காரில் இருந்த சிஎன்ஜி எரிவாயு சிலிண்டர் வெடித்து கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அதற்குள்ளாக அருகில் இருந்தவர்கள் எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து ரவி மற்றும் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், தீ மளமளவென எரிந்ததால், மற்றவர்களை மீட்க முடியவில்லை. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த போது, காரில் இருந்த மணமகன் ஆகாஷ் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்து சிதறியதே தீவிபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு ஒரு நாளே இருக்கும் நிலையில், மணமகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.