அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவில் கையெழுத்திடலாம் : சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் அனுமதி

அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த யூடியூபரான சவுக்கு சங்கர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “பெண் காவலர்களுக்கு எதிராக பேசியதாக என் மீது கோவை, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், கஞ்சா வைத்திருந்ததாக என் மீது தேனியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

இந்நிலையில், என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. பெண் காவலர்களுக்கு எதிராக பேசிய வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்குகளில் ஜாமீன் வழங்கிய போது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நேரில் அஜராகி கையெழுத்து இடவேண்டும் என்று கீழமை நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

தற்போது நான் சென்னையில் வசித்து வருவதால், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் சென்று கையெழுத்திடுவதில் சிரமம் உள்ளது. எனவே, அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து ஒரே காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் மீது 16 வழக்குகள் உள்ளதாகவும், அதில் சில வழக்குகளில், தினமும், வாரமும், மாதமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி, “சவுக்கு சங்கர் மீது உள்ள வழக்குகளில் பெரும்பான்மையான வழக்குகள் குற்றப் பிரிவு போலீஸ் பதிவு செய்த வழக்குகள், எனவே, அனைத்து வழக்குகளிலும் சென்னை குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராகி அந்தந்த வழக்குகளில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றி அவர் கையெழுத்திட வேண்டும். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றங்களில் சரியான முறையில் ஆஜராகி வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.