அக்.25 முதல் நவ.5 வரை தீபாவளி பண்டிகைக்காக 35 சிறப்பு ரயில்கள் இயக்கம் : தென் மாவட்டங்களுக்கு 10 ரயில்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 10 சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகை அக்.31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, குறிப்பிட்ட நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென், மத்திய மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து அக்.29, 30 ஆகிய தேதிகளில் புறப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரயில்களில் மொத்தமாக 7,000 வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது.

இந்நிலையில், பயணிகள் வசதிக்காக, அக்.25 முதல் நவ.5-ம் தேதி வரை 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுபோல, சாத் பண்டிகையை முன்னிட்டு, அக்.23 முதல் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து புதுடெல்லி, அகமதாபாத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, திருவனந்தபுரம், மங்களூரு, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அக்.25-ம்தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்கவும் சென்னை, எர்ணாகுளத்தில் இருந்து புதுடெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு நவ.15-ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.