சிட்கோ பிரச்சினை தொடர்பாக கோவில்பட்டி அருகே கிராம மக்கள் மறியல், கடை அடைப்பு

கோவில்பட்டி அருகே சிப்காட், தங்கள் கிராம பகுதியில் அமைக்க வலியுறுத்தி லிங்கம்பட்டி கிராம மக்கள் இன்று கடைகளை அடைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே லிங்கம் பட்டி கிராம பகுதியில் சிப்காட் அமைக்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி அதற்கான பணிகள் தொடங்கிய நிலையில், சிப்காட் அமைய உள்ள பகுதி தங்களது ஊராட்சி எல்லைக்குள் வருவதாலும், தாங்கள் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கொடுத்ததாலும் சிப்காட்டில் அமைய உள்ள தங்கள் ஊராட்சியிலேயே வரி வசூல் செய்ய வேண்டும் என குலசேகரபுரம் ஊராட்சி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு அறிவித்தபடி லிங்கம்பட்டி ஊராட்சியிலேயே சிப்காட் தொழிற்சாலைகள் தொடர வேண்டும் என வலியுறுத்தி லிங்கம்பட்டி கிராம மக்கள் இன்று காலை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில்பட்டி – கடலையூர் சாலையில் கோரிக்கையை வலியுறுத்தி திடீர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து, அங்கு வந்த நாலாட்டின் புதூர் போலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததை தொடர்ந்து, வட்டாட்சியர் சரவணபெருமாள் தலைமையிலான வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். தொடர்ந்து, இது தொடர்பாக முறையாக மனு வழங்கினால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.