கன்னியாகுமரியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் : முக்கடலில் புனித நீராடினர்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை சென்றவர்கள் வந்ததால் கன்னியாகுமரி இன்று களைகட்டியது.

கன்னியாகுமரியில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் காத்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் சீஸன் காலமான 3 மாதத்திற்கு கன்னியாகுமரியில் அதிகமான ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் ஐப்பசி மாத துவக்ககால பூஜைக்காக சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சபரிமலை செல்லும் பக்தர்களும், அங்கிருந்து தரிசனம் முடித்து வரும் பக்தர்களும் கன்னியாகுமரி முக்கடலில் நீராடி பகவதியம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதனால் அடுத்த மாதம் ஐயப்ப சீஸன் துவங்கவுள்ள நிலையில் தற்போதே கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

இன்று அதிகாலையில் முக்கடல் சங்கமத்தில் நீராடிய ஐயப்ப பக்தர்கள் பகவதியம்மனை வழிபட்டனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயமாகும் காட்சியை பார்த்து சூரிய வழிபாடு செய்தனர். ஐயப்ப பக்தர்கள் வருகையால் முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை, மற்றும் கன்னியாகுமரியின் பிற பகுதிகள் களைகட்டியிருந்தது.

இதைப்போல் திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்னர் குளிப்பதற்கான தடை நீங்கியதால் ஐயப்ப பக்தர்கள் திற்பரப்பு அருவியில் குளித்து அங்குள்ள மகாதேவர் கோயிலில் தரிசனம் செய்தனர். மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்கள், கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.