திண்டுக்கலில் வீட்டிலிருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வீட்டில் இருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள பெரிய ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (47). இவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு சாகுல் ஹமீது பட்டாசு வாங்கி வீட்டில் வைத்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை அவர் தனது வீட்டில் இருந்தபடியே புகைபிடித்துள்ளார். அப்போது, அருகில் இருந்த பட்டாசில் தீப்பொறி பற்றி பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக வெடித்தன.

இதில் சாகுல் ஹமீது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து பட்டாசுகளை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.