ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கு : விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கில் விக்கிராவண்டி உரிமையியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜரானார் . இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2019-ல் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி காலமானதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதாவை ஆதரித்து கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி சத்ய நாராயணன், அடுத்தகட்ட வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.