“சென்னையில் 30% மழைநீர் வடிகால் பணிகள் எஞ்சியுள்ளது, விரைவில் அதையும் முடிப்போம்” – முதல்வர் ஸ்டாலின்

“ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே, அதற்கான பணிகளில் இறங்கினோம். அந்த குழுவின் பரிந்துரைப்படி பணிகளை கொஞ்ச, கெஞ்சமாக செய்து வருகிறோம். ஒரே அடியாக அவற்றை செய்து முடிக்க முடியாது. அந்த பணிகள் ஓரளவு முடிந்திருக்கிறது. இன்னும் 25 முதல் 30 சதவீதம் பணிகள் பாக்கி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. வரக்கூடிய காலக்கட்டத்தில், அதையும் முடித்துவிடவோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று வடசென்னை பகுதிகளில் மழைபாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்நிலையில், தென் சென்னை பகுதியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் மற்றும் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் இன்று செய்தார். கிண்டி பகுதியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

மேலும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நீர்நிலை அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர், வேளச்சேரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிப் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, ஏற்கெனவே இருந்த அப்பகுதிகளின் நிலையையும், தற்போது உள்ள நிலை குறித்து அதிகாரிகள் வரைபடங்கள் மூலம் முதல்வரிடம் விளக்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “நாங்கள் ஏற்கெனவே, கடந்த 3 மாதங்களாகவே சென்னையில் மழை பாதிப்புகளை குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே, அதற்கான பணிகளில் இறங்கினோம்.

அந்த குழுவின் பரிந்துரைப்படி பணிகளை கொஞ்ச, கெஞ்சமாக செய்து வருகிறோம். ஒரே அடியாக அவற்றை செய்து முடிக்க முடியாது. அந்த பணிகள் ஓரளவு முடிந்திருக்கிறது. இன்னும் 25 முதல் 30 சதவீதம் பணிகள் பாக்கி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. வரக்கூடிய. காலக்கட்டத்தில், அதையும் முடித்துவிடவோம். எனவே, நிரந்தரமான தீர்வு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதி மக்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

தூய்மைப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் முழு மூச்சாக மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த பணிகளில் ஈடுப்பட்டு வெற்றிகண்ட அத்தனை பேருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் சென்னை மாநகர மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த ஆய்வின் போது தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.