வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் வருகை

வடகிழக்கு பருவமழை மீட்புப் பணிகளுக்காக கடலூர் மாவட்டத்திற்கு மாநில மீட்பு குழுவினர் இன்று வருகை தந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு இன்று காலை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் (TNDRF) 25 பேர் வந்துள்ளனர். இவர்கள் பேரிடர் மீட்புக்கான அனைத்து உபகரணங்களுடன் வருகை புரிந்துள்ளனர். இக்குழுவினர் கடலூர் தேவனாம்பட்டினம் ஈக்விடாஸ் குருகுல பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை ஆவடியில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி அனுப்பிவைக்கப்படுவர்.

இது குறித்து மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த அஜய்குமார் கூறுகையில், “நாங்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஒரு குழு கடலூருக்கும், ஒரு குழு விழுப்புரத்துக்கும், ஒரு குழு சீர்காழிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம். கனமழையால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பேரிடர்களில் இருந்து அவர்களை மீட்க அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளோம்” என்றார்.