அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு பிரார்தனை : பொதுமக்கள் மலர் தூவி மரியாதை 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அப்துல் கலாமின் 93-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கலாம் நினைவிடத்தில் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் சலீம், ஆவுல் மீரா, மருமகன் நிஜாம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமுதாயத்தவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது இர்பான், மற்றும் அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது தேசிய நினைவகத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.

முன்னதாக அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.