“எத்தகைய சவால்களுக்கும் விமானப் படை தயாராக இருக்க வேண்டும்” – தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங்

”தேச நலனுக்காக எத்தகைய சவால்களையும் சந்திக்க இந்திய விமானப் படை தயாராக இருக்க வேண்டும்” என இந்திய விமானப் படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் வலியுறுத்தினார்.

இந்திய விமானப்படை தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அத்துடன், இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, சென்னை, தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விமானப் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. முப்படைகளின் தளபதி அனில் சவுகான் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய விமானப் படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், விழாவில் அமர் ப்ரீத் சிங் பேசியது: ”இந்த நாளில் நாம் நமது சேவையை நமது நாட்டுக்காக மீண்டும் அர்ப்பணிக்கிறோம். நாம் கடந்த காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து எதிர்கால தேவைக்கான சவால்களை சந்திக்க தயாராக வேண்டும். தேச நலனுக்காக எத்தகைய சவால்களையும் சந்திக்க இந்திய விமானப் படை தயாராக இருக்க வேண்டும்.

சர்வதேச அளவில் தற்போதைய பாதுகாப்பு சூழல் நிலையற்ற தன்மை கொண்டதாக உள்ளது. நடைபெற்று வரும் போர் பதற்றம் உள்ளிட்டவற்றை சமாளிக்கும் அளவுக்கு இந்திய விமானப்படை வலிமை வாய்ந்ததாக உள்ளது. அத்துடன், நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவது, புத்தாக்கங்களை செயல்படுத்துவதன் மூலம், எத்தகைய சூழ்நிலையையும் சந்திக்கும் திறனை விமானப் படை பெற்றுள்ளது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தளவாட உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், நிபுணர்கள் உள்ளிட்டோரை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

‘தாரங் சக்தி’ என்ற மிகப் பெரிய கூட்டுப் பயிற்சி இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 30-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகள் பங்கேற்றன. இப்பயிற்சி, இந்திய விமானப் படை வீரர்களின் திறமை மற்றும் தொழில்முறைக்கு சான்றாக அமைந்தது. மேலும், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெறும் சமயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்திய விமானப்படை செய்து வருகிறது” என்று அமர் ப்ரீத் சிங் கூறினார்.

பின்னர், சென்னை மெரினா கடற்கரையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது போன்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சாரங் மற்றும் பிரச்சாந்த் ஹெலிகாப்டர்கள், ரஃபேல் மற்றும் சூர்யகிரண் போர் விமானம் ஆகியவற்றின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை விமானப் படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்டு ரசித்தனர். மேலும், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

விமானப் படை பயிற்சி பிரிவு தளபதி ஏர்மார்ஷல் நாகேஷ் கபூர், விமானப் படை தின அணிவகுப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏர் மார்ஷல் கே.பிரேம் குமார், தாம்பரம் விமானப்படை தளபதி ரதீஷ் குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக, பயிற்சி அணிவகுப்பின் போது வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் 3 விமானப்படை வீரர்கள் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். உடனடியாக அவர்கள் அங்கிருந்து மீட்டுக் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.