இலங்கை சிறைகளில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த செப். மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு இலங்கை ரூபாயில் தலா 40 லட்சம் அபராதம் மற்றும் ஒரு மீனவருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை முடக்கும் நோக்குடன் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

முன்பு தமிழக மீனவர்களுக்கு 6 மாதம், ஓராண்டு சிறை தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றங்கள், தற்போது குறைந்தபட்ச சிறை தண்டனையை ஒன்றரை ஆண்டுகளாக உயர்த்தியுள்ளன. இதுதவிர, கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் இந்த முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.