புதுச்சேரியில் தீபாவளிக்கு முன் ரேஷன் கடைகள் திறக்கப்படும் : முதல்வர் ரங்கசாமி

தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு 2 கிலோ இலவச சர்க்கரை, பத்து கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் பல ஆண்டுகளாக மூடியுள்ளன. தற்போது கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ரேஷன் கடைகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது.

தீபாவளிக்கு முன்பாக அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்துள்ளோம். முதலில் ரேஷனில் 2 கிலோ இலவச சர்க்கரை, பத்து கிலோ இலவச அரிசி தீபாவளிக்காக வழங்கப்படும். கடைகளில் பணியாற்றுவோருக்கு ஒரு மாத சம்பளம் தரப்படும். பிறகு தொடர்ந்து சம்பளம் தர நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷனுக்காக ரூ. 1.45 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

அடுத்து அரிசி, சர்க்கரை டெண்டர் வைத்து வழங்குவோம். இலவச அரிசியை வீடு தேடி சென்று தர அரசு ஆலோசனை செய்யும். ரேஷன் கடை திறந்தவுடன் அங்கேயே தருவோம். மாநில அரசு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கும் எண்ணமும் உள்ளது. நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள், அவர் நன்றாக வரவேண்டும். மனதார வாழ்த்துகிறேன். இதுவரை மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் பிறகு சிந்திப்போம் என்று முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார். பின்னர்,உங்கள் நண்பர் விஜயுடன் வரும் தேர்தலில் கூட்டணி அமையுமா என்று கேட்டதற்கு, தேர்தல் வரும்போது சிந்திக்கலாம் என்று பதிலளித்தார்.