3-வது வாரமாக கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் இருந்து 5 வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம்

புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு இன்று மூன்றாவது வாரமாக கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் இருந்து 5 வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் இன்று காலை தொடங்கியது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் கும்பகோணம் பகுதியில் உள்ள 5 வைணவ கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று, கும்பகோணம் சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்கள், திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், ஒப்பிலியப்பன் கோயில் வெங்கடாசலபதி கோயில், நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோயில் ஆகிய 5 வைணவ கோயில்களுக்கு, 3 வாகனங்களில் 35 பக்தர்கள் இன்று ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் இந்தப் பயணத்தை அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் கோ.கிருஷ்ணகுமார், எஸ்.சிவசங்கரி மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆ.சங்கர் ஆகியோர் தொடங்கிவைத்து, பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் மற்றும் பிரசாதங்களை வழங்கினர். இன்றைய பயணத்தைத் தொடர்ந்து, அக்.12-ம் தேதியும் இதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறையினரால் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.