ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், அக்டோபர் 9-ம் தேதி பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 12-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடைய தலமாதலால் இது முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் கொடிப் பட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை வாகனத்திலும் அனுமன் யானை, தங்க சேஷ வாகனங்களிலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதில் 5-ம் நாள் விழாவான அக்டோபர் 8-ம் தேதி கருட சேவையும், 9-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 10-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நால் திருவிழாவான 12-ம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.

அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.