திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் மீட்பு

திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலையில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான வணிக கட்டடம் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இமிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்த சாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமாக டாக்டர் நடேசன் சாலையில் உள்ள சதுரடி பரப்பிலான கடைகள் மற்றும் குடியிருப்புகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருக்கோயில் துணை ஆணையர் சி.நித்யா, உதவி ஆணையர் கி.பாரதிராஜா ஆகியோர் முன்னிலையில் காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு திருக்கோயில்வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.6 கோடியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது தனிவட்டாட்சியர் ஆலயநிலங்கள் திருவேங்கடம் சிறப்புப் பணி அலுவலர்கள் கொளஞ்சி, நித்யானந்தம், .சுசில்குமார், திரு.ரமேஷ், ஆய்வாளர், மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.