ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் : 800-க்கும் அதிகமான படகுகள் கரையில் நிறுத்தம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அந்தப் படகுகளில் இருந்த 17 மீனவர்களும் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நீதிமன்றக் காவல் அக்டோபர் 10-ம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட படகுகளையும் மீட்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ராமேசுவரத்தில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) தங்கச்சிமடம் மீனவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.