பண்டிகை காலத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை இன்று ரூ.48 உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் ரூ.1855-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.1903 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில், நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான வணிக எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ரூ.48 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை உடனடியாக அமலுக்கு வந்தது.

புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,740 -க்கும், மும்பையில் ரூ.1,692-க்கும், சென்னையில் ரூ.1,903-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,850 -க்கும் விற்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது வணிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓட்டல்களில் உணவுகளின் விலைவாசியும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.