‘இனி தினமும் உங்களை சந்திப்பேன்’ – மகளிரணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திலகவதி விஜயகுமார் தலைமையில் இன்று செஞ்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சேகர். மாவட்ட அவைத் தலைவரான முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மகளிரணி மாநில நிர்வாகி தமிழரசி ரவிகுமார் எம்எல்ஏ, அமலு விஜயன் எம்எல்ஏ, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, முன்னாள் எம்எல்ஏ-க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், செந்தமிழ் செல்வன், செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரான செஞ்சி மஸ்தான் பேசியதாவது: பெரியாரின் கனவையும், பாரதி கண்ட புதுமைப் பெண்களையும் உருவாக்கிக் கொண்டுள்ள தமிழகத்தின் செல்லப்பிள்ளை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டுள்ளார். நமக்கெல்லாம் முகவரி அளித்த திமுகவின் வெற்றிப் பயணத்தில் பங்கேற்று, திமுகவின் கடைசி தொண்டனாக நானும் உள்ளேன்.

இதையே என் பலம் என நம்புகிறேன். அண்ணாவின் மேடை பேச்சை ரசித்தும், கலைஞரோடு பயணித்தும் வளர்ந்தவன், முதல்வர் ஸ்டாலினின் நண்பனாகவும், உதயநிதியின் கரத்தை வலுவூட்டும் விதமாகவும் நானும் இருப்பேன். இதற்கு முன்பு மாதத்தில், வாரத்தில் ஓரிரு நாட்கள் உங்களைச் சந்திதேன்.

இனி தினமும் உங்களைச் சந்திப்பேன். நீங்களும் உங்கள் குடும்பமும் 1986 முதல் எனக்கு உறுதுணையாக நிற்பவர்கள் என்பதை நான் அறிவேன். இனி வரும் காலங்களில் தினமும் 18 மணி நேரம் நான் உங்களோடு இருப்பேன். உங்கள் உள்ளத்தில் என் குரல் என்றென்றும் ஒலிக்கும் என்று செஞ்சி மஸ்தான் பேசினார்.