ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை : பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேரும், ஒரு போக்குவரத்துக் காவலரும் காயம் அடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குல்காம் மாவட்டத்தின் தேவசார் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படை வீரர்கள் தொடங்கிய நிலையில் இந்த துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “துப்பாக்கிச் சண்டையின் போது திசைமாறி வந்த துப்பாக்கித் தோட்டாவால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (போக்குவரத்து) மும்தாஜ் அலிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர்.” என்று தெரிவித்தனர்.