“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நல்ல முடிவைக் கொடுத்துள்ளது” – அமைச்சர் முத்துசாமி

“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை கொடுத்துள்ளது” என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதுதொடர்பான கண்காட்சியை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

பின்னர், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்தி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. உச்ச நீதிமன்றம் இதில் சரியாக நல்ல முடிவைக் கொடுத்துள்ளது. நிச்சயமாக மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்கள், தேவை இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

முதல்வர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக. இதை ஒரு வெற்றி மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும் முதல்வரும் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.