போலீஸுக்கு துப்பு கொடுத்ததாக புதுச்சேரியில் டீ கான்ட்ராக்டர் வெட்டிப் படுகொலை

புதுவை மேட்டுப்பாளையத்தில், போலீஸுக்கு துப்புக் கொடுத்ததாக சந்தேகப்பட்டு டீ கான்ட்ராக்டர் ஒருவரை 5 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாபு (42). இவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் டீ சப்ளை செய்யும் கான்ட்ராக்டர் இருந்தார். அதனால் இவரை ‘டீ பாபு’ என அழைப்பது வழக்கம்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் புளியங்கொட்டை ரங்கராஜன். இவர்களுக்கு இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்தது. ரவுடியான புளியங்கொட்டை ரங்கராஜன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் அடிக்கடி போலீஸார் அவரை அழைத்து விசாரணை நடத்தியும், வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியும் வந்தனர்.

டீ பாபு தகவல் கொடுத்துத்தான் போலீஸார் தனது வீட்டில் வந்து அடிக்கடி சோதனை நடத்துவதாக ரங்கராஜன் சந்தேகப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று ‘டீ பாபு’ மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ரங்கராஜன், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தலை, உடலில் பலத்த வெட்டுக் காயமடைந்த ‘டீ பாபு’ சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இச்சம்பம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி தொழிலாளர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி. பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் புதுவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘டீ பாபு’வை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 5 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ‘டீ பாபு’ கொலை நடந்த இடத்தில் எஸ்எஸ்பி நாரா சைதன்யா, எஸ்பி வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோரும் விசாரணை நடத்தினர்.