அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு : தொடக்கக் கல்வித் துறை நடவடிக்கை

தமிழக பள்ளிக் கல்வியில் துறையின் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: “தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் துறை அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரங்களை தொகுத்து அனுப்ப அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த விவரங்கள் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்யப்பட்டு அவை மாவட்டக் கல்வி அலுவலரால் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து ஒன்றியம் வாரியாக தொகுத்து கையொப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

மேலும், சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக பணியாளருடன், தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில் நேரில் வருகை தர தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.