உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வாகனம் மரத்தில் மோதி விபத்து : 6 பேர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை சாலையோர மரத்தில் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று சாமி கும்பிடச் சென்றனர். திருச்செந்தூரில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் வேனில் திரும்பிய போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேட்டத்தூர் எனும் இடத்தில் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருநாவலூர் போலீஸார் விபத்தில் இறந்தவர்களை முண்டியம்பாக்க அரசு மருத்துவமனைக்கும், காயம் அடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

ஆனால் விபத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் நடந்தது எனவே இறந்தவர்கள் உடலை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எடுத்து செல்லுமாறு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சடலங்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.