புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் ’‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில்,  தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்றையதினம் மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டது.

இதில், நான்கு பரிவுகளாக உடற்திறன், செவிதிறன், பார்வைதிறன், மனநலம் குன்றிய மாற்றுதிறனாளிகளுக்கான தடகளம், கபாடி, அடாப்டட் வாலிபால், எறிபந்து மற்றும் இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில்; முதலிடம் பெறுபவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக மாநில அளவில் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டிகளில் 500 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சிறப்பான முறையில் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தெரிவித்தார்.

மேலும், புதுக்கோட்டை கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில், 600 மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு மதிய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் து.செந்தில்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வர் தங்கராஜ், செந்தில்கணேசன், புதுக்கோட்டை கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் சு.சிவசக்திவேல், மாவட்ட விளையாட்டு சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.