ஆய்வுக்குச் சென்ற இடத்தில் மாநகராட்சி பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்த கடலூர் மேயர்

கடலூர் மாநகராட்சி பள்ளியில் தூய்மையை வலியுறுத்தி இன்று மேயரே வகுப்பறையை சுத்தம் செய்தார்.

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மேயர் சுந்தரி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்ட அவர், வகுப்பறைகள் சுத்தம் செய்யாமல் குப்பையும், மண்ணுமாய் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலக அதிகாரிகளை அழைத்து பள்ளியை தூய்மைப்படுத்த உத்தரவிட்டார். மேலும், அவர் ஏன் வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்படாமல் இருக்கிறது என பள்ளி தலைமை ஆசிரியரையும் கடிந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் வகுப்பறைக்குள் சென்று துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார். அத்துடன், வகுப்பறைகளை தாங்களே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.