மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம் : சிபிஎஸ்இ

சிடெட் எனும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பட்டதாரிகள் அக்டோபர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. சிடெட் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் உட்பட 20 மொழிகளில் நேரடிமுறையில் நடைபெறும். அதன்படி நடப்பாண்டு டிசம்பர் பருவத்துக்கான சிடெட் தேர்வு டிசம்பர் 1-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம், தேர்வு வழிமுறைகள், பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.