வெலிங்டன் ராணுவ மையத்தில் ஸ்வச்தா ஹி சேவா விழிப்புணர்வு பேரணி

குன்னூர் ராணுவ முகாம் பகுதியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரியம் சார்பில் ஸ்வச்தா ஹி சேவா பிரச்சார தொடக்க நிகழ்ச்சியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஸ்வச் பாரத் மிஷன் தொடங்கப்பட்ட 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை ஸ்வச்தா ஹி சேவா பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு தொடங்கியுள்ளது. இதில், இந்தியா முழுவதும் தூய்மை விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குன்னூர் ராணுவ முகாம் பகுதியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரியம் சார்பில், பள்ளி மாணவ – மாணவியர் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இந்தப் பேரணியை கண்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டோ, நியமன உறுப்பினர் ஸ்ரீபா, வாரிய முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணி ராணுவ முகாம் பகுதி வழியாக சிங்காரத்தோப்பு அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்கா வரை நடைபெற்றது. இந்தப் பேரணியில் கண்டோன்மென்ட் பள்ளி மாணவ – மாணவியர் 200-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கண்டோன்மென்ட் வாரிய சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பழனிசாமி, ஆய்வாளர் பூரணி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரூபா, இமாகுலேட் மற்றும் கண்டோன்மென்ட் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.