பணிநிரந்தம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

பணிநிரந்தம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூ.10,000 மாத சம்பளமாக தரப்படுகிறது.

இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 400-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது; திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக அறிவித்தது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கான முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. இதுசார்ந்து பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை.

அதனால் தமிழக அரசுக்கு நினைவூட்டும் விதமாக எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் நிலையை உணர்ந்து கொண்டு பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.