புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாணவர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று மாவட்ட தலைமையகத்தில் மாணவர்களுக்கு (தர்பியா) நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் மாநிலச் செயலாளர் கே.ரபீக் முஹம்மது  தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஹெச்.சித்திக் ரகுமான்,  செயலாளர் முகமது மீரான், பொருளாளர் எஸ்.ரபிக் ராஜா, துணைத் தலைவர் ராஜேந்திரபுரம் மீரான், துணைச் செயலாளர்கள் அறந்தை சேக் அப்துல்லா, புதுகை மீரான், அப்துல் ரகுமான் ரவுஃப், வர்த்தக அணி உஸ்மான், மாணவரணி முகமது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில பேச்சாளர் என்.ராஜ் முகமது மற்றும் ஹெச்.சித்திக் ரகுமான் சிறப்புரையாற்றினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருமறைக்குர் ஆனில் மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று கூறப்பட்டுள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாற்றையும் , வாழக்கை செய்தியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 10 மாத கால தொடர்பிரச்சாரத்தை மிகச்சிறப்பாக இறைவனின் அருளால் செய்வோம் என இந்த கூட்டம் வாயிலாக உறுதி ஏற்கப்பட்டது.

சமீபத்தில் சென்னை அசோக் நகர் மேல்நிலைப்பள்ளியில் மஹா விஷ்ணு எனும் நபர் ஆன்மிகம் குறித்து பேச அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் ஆன்மிகம் குறித்து பேசுகிறேன் எனும் பெயரில் மாற்று திறனாளிகளை இழிவுப்படுத்தும் விதமாக அவரது பேச்சு அமைந்துள்ளது. இவருடைய பேச்சின் நோக்கத்தையும் அதற்கு பாஜக கூட்டங்கள் வக்காலத்து வாங்குவதையும் பார்க்கும் போது இவர் சங்க பரிவார கூடாரத்தை சார்ந்தவர் எனும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது, தற்போதைய பிரச்சினையில் இரண்டு தலைமை ஆசிரியை இடம் மாற்றியதும், மஹா விஷ்ணுவை கைது செய்த்து மட்டும் போதாது, மாறாக அரசின் கொள்கைகளை விட்டு விட்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பிஞ்சுகளின் உள்ளங்களில் பல்வேறு வகைகளில் புகுத்த நினைக்கும் அதிகாரிகள் தயவு தாட்சண்யமின்றி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தங்கள் மாநிலத்தில் வாழும் முஸ்லீம்களின் மீது வெறுப்பை கக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். ஹிந்து முஸ்லிம்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இஸ்லாமியர்களை இழிவாக அழைக்கப்பயன்படுத்தும் வாசகமான மியா முஸ்லிம்களை அஸ்ஸாமை கைப்பற்றவிட மாட்டேன் எனவும், 1930 களில் இருந்து சட்டமன்ற அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகைக்கு வழங்கப்பட்ட 2 மணி நேர அனுமதியை ரத்து செய்வது எனவும் எடுத்துள்ள நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானவை இதை இந்த கூட்டம் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம்.

வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு முயற்சிக்கிறது,  வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை   இம்மசோதாவின் மூலம் அரங்கேற்ற நினைக்கும் மத்திய மைனாரிடிட்டி பாஜக அரசை இந்த கூட்டம் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்காக அமைக்கப்பட்டுள்ளா கூட்டு பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இஸ்லாமியர்களின் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். கூட்டுப்பாராளுமன்றக்குழுவிற்கு வக்ப் சட்டம் குறித்த எதிர்ப்பை கடிதங்களின் மூலமும் ஈமெயில் மூலமாகவும் பதிவு செய்ய வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மேலும் சாதிவாரிக்கணக்கெடுப்பை எடுத்து இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசை இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட தலைமை அலுவலகம் அருகில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் எங்கள் அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆதலால் இதற்கு உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.