வ.உ.சி. பிறந்த நாளை தேசிய வழக்கறிஞர்கள் தினமாக அறிவிக்க கொள்ளுப் பேத்தி கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை தேசிய வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் என அவரது கொள்ளுப்பேத்தி செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது கொள்ளுப்பேத்தியும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையுமான செல்வி தனது வீட்டில், இன்று காலை வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் முழு உருவ வெண்கல சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். மேலும் அவரது பிறந்த தினத்தை தேசிய வழக்கறிஞர்கள் நாளாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் பாரத பிரதமரை சந்திக்க உள்ளேன்.” என்றார். அப்போது அவரது கணவர் வழக்கறிஞர் முருகானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.