“என்றைக்கும் இப்போதுள்ள கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்” – அமைச்சர் கே.என்.நேரு

“என்றைக்கும் இப்போதுள்ள கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்கமாட்டார். திமுக தலைமையிலான எங்களது கூட்டணி மிகச்சரியான கூட்டணி” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட தியாகி. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பெரம்பலூர் எம்பி-யான அருண் நேரு, வெள்ளாளர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் ஹரிஹரூன், சோழிய வெள்ளாளர் சங்கம் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வ.உ.சி-க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: திமுக தலைமையிலான கூட்டணி மிகச் சரியான கூட்டணி. நான் லால்குடியில் பேசியதை சிலர் தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். என்றைக்கும் இப்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். நான் பேசியதன் கருத்து என்னவென்றால், 38 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார். அதேபோல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந்தாலும் பாடுபடுவோம் என்ற அர்த்தத்தில் தான் பேசினேன். அதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமுகமாக பழகுகின்றனர். எங்கள் கூட்டணி அருமையாக உள்ளது. எங்கள் கூட்டணி மிகச் சரியான கூட்டணி என்று கே.என்.நேரு தெரிவித்தார்.