“பாஜக ஆட்சியை அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை” – காஷ்மீரில் ராகுல் காந்தி பேச்சு

“பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஜம்மு காஷ்மீரில் நடந்த பொதுக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி பேசினார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனந்தநாக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “கடந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை உளவியல் ரீதியாக தோற்கடித்துள்ளோம். இந்தியா கூட்டணி அவருக்கு முன் நின்றது. அதன் காரணமாக அவரது முழு நம்பிக்கையும் மறைந்துவிட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று பாஜக முதலில் கூறியது. ஆனால், இப்போது சாதிவாரி கணக்கெடுப்புதான் சரியானது என்று ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடி நியமனம் கூடாது என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் எழுப்பியது. நேரடி நியமன முறை இருக்காது என பாஜக தற்போது கூறியுள்ளது. இப்போது நரேந்திர மோடி, இந்திய மக்களைப் பார்த்து பயப்படுகிறார். காங்கிரஸ் கட்சி, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நாட்டில் 3-4 பேர் மட்டுமே அனைத்து வணிக வாய்ப்புகளையும் பெறுகிறார்கள். அமித் ஷாவின் மகன் கிரிக்கெட் மட்டையை எடுத்ததில்லை, ஆனால் கிரிக்கெட்டின் பொறுப்பாளராகிவிட்டார். நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். பாஜக அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்கும். வழங்காவிட்டால், இந்தியா கூட்டணி அரசு வந்தவுடன் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதே அதன் முதல் பணியாக இருக்கும்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் எனக்கும் இருப்பது அரசியல் உறவு அல்ல; ரத்த உறவு. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என இந்த உறவு மிகவும் பழமையானது. உங்களது பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்புகிறேன். என்னிடமிருந்து நீங்கள் எதை விரும்பினாலும் என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். எனது காஷ்மீரி பண்டிட் சகோதரர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். பாஜக தனக்கு சாதகமாக உங்களைப் பயன்படுத்திக்கொண்டது. ஆனால், உங்களுக்கு உதவவில்லை. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நமது அரசு வரும்போது அது ​​உங்களை உடன் அழைத்துச் செல்லும்.

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜனநாயகத்தின் மீது தாக்குதல்களை நடத்துகின்றன. ஜம்மு காஷ்மீருக்கு இருந்த மாநில உரிமையைப் பறித்துவிட்டனர். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. துணைநிலை ஆளுநர்தான் ஜம்மு காஷ்மீரை இயக்குகிறார் என்று இங்கே கூறப்படுகிறது. துணைநிலை ஆளுநர் என்ற வார்த்தை தவறானது. அவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் மன்னர்கள். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள்.

இன்று ஜம்மு-காஷ்மீர், வெளியில் இருந்து ‘மன்னராட்சி’யால் நடத்தப்படுகிறது. இங்குள்ள செல்வம், வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் காஷ்மீரிகளுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, வெளியாட்களுக்கே வழங்கப்படுகிறது. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியைப் பிடிக்கும். மாநில அந்தஸ்து கோரிக்கையை அது முழு பலத்துடன் தெருக்களில் இருந்து சட்டமன்றம் வரை, சட்டமன்றத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை எழுப்பும்” என தெரிவித்தார்.

முன்னதாக, ராம்பன் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நடக்கும் சண்டை, இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலானது. ஒரு பக்கம் வெறுப்பு, வன்முறை, பயம். மறுபுறம் அன்பும் மரியாதையும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடத்தப்பட்ட இந்திய ஒற்றுமை யாத்திரையில், ‘வெறுப்பு சந்தையில் அன்பின் கடையை திறக்க வேண்டும்’ என்ற முழக்கத்தை எழுப்பினோம். வெறுப்பைப் பரப்புவது பாஜகவின் வேலை. அன்பைப் பரப்புவது எங்கள் வேலை. பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது. நாங்கள் இணைக்கிறோம்.

மக்களவைத் தேர்தலுக்கு முன், நெஞ்சை அகல விரித்தபடி வந்த நரேந்திர மோடியின் தோள்கள் தற்போது சுருங்கியுள்ளன. இம்முறை நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முன், அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உள்ளே சென்றார்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.