கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது : பொதுப் பிரிவுக்கு ஆன்லைனில் நடைபெறுகிறது

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாக கலந்தாய்வு நடக்கிறது. பொது பிரிவுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 660 இடங்கள் உள்ளன.

இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 597 இடங்கள் தமிழகத்துக்கு உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கின்றன.

இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்தக் கல்லூரிகளில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 – 25-ம் ஆண்டு கலந்தாய்வுக்கு கடந்த 7-ம் தேதி தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டது. பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 15 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முன்னிலை பெற்றுள்ளனர். 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் படிப்பில் 45 இடங்கள், பி.டெக் படிப்புகளில் 8 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில், பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீடின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளையும், பி.டெக் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் 6-ம் தேதியும் நேரடியாக நடைபெறவுள்ளது.

அதேபோல், பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் படிப்புக்கு பொதுபிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று முதல், வரும் 7-ம் தேதி வரை பதிவு மற்றும் கல்லூரி வளாக விருப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுக்கான கடிதம் வரும் 11-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.