செம்மொழி தமிழ் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக குடியரசு துணைத் தலைவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு

செம்மொழியான தமிழின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்.

அப்போது, டெல்லி பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்கான ஆராய்ச்சி மையத்தையும், புதிய துறையையும் உருவாக்க வேண்டுமென்று குடியரசு துணைத் தலைவரிடம் மத்திய இணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.

நாடு முழுவதும் மாணவர்களுக்கு தமிழ் போன்ற பழமையான செம்மொழிகளைக் கற்பிக்கும் வகையில் பிற கல்லூரிகளிலும், துறைகளிலும் புதிய இருக்கைகளை உருவாக்க வேண்டுமென்றும் எல்.முருகன், குடியரசு துணைத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். அமைச்சருடன், ரா.முகுந்தன், எஸ்.அருணாச்சலம், முத்துசாமி ஆகியோரை கொண்ட டெல்லி தமிழ் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழுவும் சென்றிருந்தது.