“இனம், மதம், மொழி பிரிவினைப் போக்குக்கு மாணவர்கள் பலியாக் கூடாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது என்றும், உலகளவில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், இந்திய தேசத்தை சிலர் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் துண்டாட நினைக்கிறார்கள். இத்தகைய பிரிவினை போக்குக்கு மாணவர்கள் ஒருபோதும் பலியாகி விடக்கூடாது என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு ஹிந்தி சாகித்ய அகாடமி மற்றும் சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி சார்பில் தேசிய கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா அக்கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியது: “தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி. தமிழில் பேச வேண்டும் என்பது எனது ஆசை. என்னால் தமிழை வாசிக்க முடியும். மற்றவர்கள் தமிழில் பேசினால் அதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், தமிழில் பேசுவதுதான் மிகவும் சிரமமாக உள்ளது. கண்டிப்பாக நானும் ஒரு நாள் தமிழில் பேசுவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பழமையும். சிறப்பும் வாய்ந்த தமிழ் மொழியை உலக அளவில் கொண்டுசெல்ல பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்றைய தினம் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவை ஒரு பொருட்டாக எண்ணாத நாடுகள் தற்போது இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருகிறோம். உலகின் 3-வது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. முன்பு வெறும் 300, 400 என்ற அளவில் இருந்த ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதில் 20 சதவீத தொழில்நிறுவனங்கள் யூனிகார்ன் நிறுவனங்கள், அதாவது ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மூதலீடுகள் கொண்ட நிறுவனங்கள். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்கள் வறுமை கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். தற்போது உலக அளவில் எங்கு பார்த்தாலும் போர்சூழல் நிலவுகிறது. ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காஸா என ஆங்காங்கே போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த உலகை அழித்துவிடும் ஆற்றல் கொண்ட அணுகுண்டுகளை சில நாடுகள் வைத்துள்ளன. ஆனால், இந்தியா எப்போதும் அமைதியை விரும்பக்கூடிய நாடாகவே இருந்து வருகிறது. உலகில் ஒருபுறம் சில நாடுகளில் செல்வம், பொருளாதார வளமும் மிதமிஞ்சி காணப்படுகிறது. ஆனால், அதேநேரத்தில் சில நாடுகளில் பசியும், பட்டினியும் நிலவுகிறது. கரோனா தொற்று காலத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வாரி வழங்கிய நாடு இந்தியா. உதவும் குணம் என்பது இந்திய நாட்டின் மரபணுவில் இருக்கிறது.

இந்திய தேசத்தை சிலர் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் துண்டாட நினைக்கிறார்கள். இத்தகைய பிரிவினை போக்குக்கு மாணவர்கள் ஒருபோதும் பலியாகி விடக்கூடாது. வாழ்க தமிழ், வாழ்க இந்தி, வாழ்க பாரதம்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். விழாவில், தமிழ்நாடு ஹிந்தி சாகித்ய அகாடமியின் தலைவர் பேராசிரியை நிர்மலா எஸ்.மவுரியா, செயலாளர் ஈஸ்வர் கருண், கல்லூரியின் செயலாளர் அசோக்குமார் முந்த்ரா, முதல்வர் எஸ்.சந்தோஷ் பாபு மற்றும் மாணவ – மாணவியர் கலந்துகொண்டனர்.