மறைந்த ராணுவ தளபதியின் குடும்பத்துக்கு 48 மணி நேரத்துத்துக்குள் ஓய்வூதிய ஆணை வழங்கி அசத்தல்

மறைந்த ராணுவ தளபதியின் குடும்பத்துக்கு 48 மணி நேரத்துக்குள் குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) வீரர்களின் குடும்ப ஓய்வூதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்து சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்குதல், ஆதார் விவரம் புதுப்பித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பத்மநாபனின் இறப்புச் சான்றிதழ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது. சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் குடும்ப ஓய்வூதிய ஆணையை மறைந்த ஜெனரல் பத்மநாபன் மனைவியிடம் இன்று வழங்கினார்.