செப்.10 வரை வாயிற்கூட்டங்கள் : போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 10 வரை வாயிற்கூட்டங்கள் நடத்தப்படும் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியது: “கடந்த 27-ம் தேதி, சென்னை குரோம்பேட்டையில் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் 84 சங்கங்கள் கலந்து கொண்டன. பேச்சுவார்த்தை தொடங்கியவுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் சங்கங்களை முறைப்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் வைத்துள்ள கோரிக்கையை விவாதிக்க வேண்டுமென கோரினோம்.

மேலும், அடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக் கால பலன்களை உடனடியாக வழங்குவது, நிலுவை ஓய்வு கால பலன்களை வழங்குவது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 109 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்குவது, மருத்துவ காப்பீடு, அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளோம்.

இந்தக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மண்டல தலைமையகங்களிலும், செப்டம்பர் 10-ம் தேதி வரை பேச்சுவார்த்தை விளக்க வாயிற்கூட்டங்களை நடத்த இருக்கிறோம்” என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறினர்.