டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத்தேர்வு முடிவு வெளியீடு : டிசம்பரில் முதன்மைத் தேர்வு

ஒன்றரை லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வு டிசம்பர் 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 90 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ம் தேதி நடந்தது. இத்தேர்வை ஒரு லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இந்நிலையில், முதல்நிலைத்தேர்வுக்கான முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) இன்று மதியம் 1.30 மணியவில் வெளியிடப்பட்டன. அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வு டிசம்பர் 10 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அ.ஜான் லூயின் தெரிவித்துள்ளார்.

முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் செப்டம்பர் 6 முதல் 15-ம் தேதி வரை இ-சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறும், தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.