‘மெட்ரிக்குலேஷன்’ என்பதை நீக்கிவிட்டு ‘தனியார் பள்ளிகள்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி வழக்கு

மெட்ரிக்குலேஷன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெயரில் உள்ள ‘மெட்ரிகுலேஷன்’ என்ற வார்த்தையை நீக்கி, தனியார் பள்ளி என பெயர் வைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட முடியாது. மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக கல்வியாளர்களும், தமிழக அரசும் தான் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். எனவே இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.