“முன்னாள் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க பட்டியலின எம்எல்ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்தனர்” – திவாகரன் தகவல்

“தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்கு முன்னதாக தனபாலை தேர்வு செய்வதற்கு பட்டியலின எம்எல்ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்தனர்” என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் கூறியதாவது: பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்றுதான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன். அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால், 35 பட்டியலின எம்எல்ஏ-க்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குள் பழனிசாமியை உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு நடந்துவிடும். பழனிசாமிக்கு அட்வைஸ் செய்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர் என்னை விட மூத்தவர்.

மத்திய அரசுடன் 24 மணி நேரமும் திமுக மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தான் தமிழகத்துக்கு நிதிகள் வருவதில்லை. மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சுமுகமான முறையை மாநில அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மோதல் போக்கால் பாதிக்கப்படுவது மக்கள் தான். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் தன்னைப் போன்ற கல்வியாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று திவாகரன் கூறினார்.