அண்ணாமலை வெளிநாட்டு பயணம் எதிரொலி : ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அரண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, இங்கிலாந்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு கல்வி பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்கிறார். மாநிலத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கட்சியின் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவின் வழிகாட்டுதலின்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா நியமிக்கப்படுகிறார். குழுவின் உறுப்பினர்களாக மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் எம்.முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த குழு, மாநில உயர்நிலைக் குழுவோடு கலந்தாலோசித்து கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.